சமூக நலத் துறை தலைமை இயக்குநர் மெமெ ஜைனல் ரஷிட், எஸ் பங்காரம்மா, பாகாங் ரொம்பினில் 1983 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் தேதி மதம் மாற்றம் செய்யப்பட்டார் என்னும் தனது கூற்றுக்கு ஆதாரங்களை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மதம் மாற்ற சான்றிதழ் அவர் 1989 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ம் தேதி மதம் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறுவதை பங்காரம்மாவின் வழக்குரைஞர் கூய் சியாவ் லியூங் இன்று பத்திரிகையாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.
“அவருக்கு ஒரு வயதாக இருக்கும் போது அவருடைய இந்துப்
பெற்றோர்களினால் மதம் மாற்றம் செய்யப்பட்டதாக சமூக நலத் துறை இப்போது கூறுகிறது.
ஒரே நபருக்கு இரண்டு முறை இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டிருக்க முடியாது”, என்று அவர் சொன்னார்.
27 வயதான பங்காரம்மா முஸ்லிம் என்றும் அவர் ஓர் இந்துவைத் திருமணம் செய்து கொண்டிருப்பது சட்டப் பிரச்னை என்று பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத் தலைவர் ஷாபுடின் யாஹாயா கூறியிருப்பதையும் அவர் குறை கூறினார்.
சமூக நல இல்லத்தின் நிர்வாகிகள் இளம் வயது நபர் ஒருவரை மதம் மாற்றிய முக்கியக் கேள்விக்கு பதிலளிக்க சமூக நலத் துறையும் இஸ்லாமிய அதிகாரிகளும் தவறி விட்டதாகவும் கூய் குறிப்பிட்டார்.
18 வயதுக்கு உட்பட்ட யாரையும் அவருடைய பெற்றோரின் அனுமதி இல்லாமல் மதம் மாற்றம் செய்யக் கூடாது என்று 1993 ம் ஆண்டுக்கான பினாங்கு இஸ்லாமிய விவகார நிர்வாகச் சட்டத்தின் 80 வது பிரிவு வரையறுத்துள்ளது.
பங்காரம்மாவின் மதம் மாற்றம் தொடக்கத்திலிருந்தே சட்ட விரோதமானது என்றும் கூய் சொன்னார்.
“அவரை (ஏழு வயதில்) மதம் மாற்றம் செய்ததின் மூலம் இஸ்லாமிய அதிகாரிகள் தங்களது சொந்தச் சட்டத்தையே மீறியுள்ளனர்.”
பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றம் பங்காரம்மாவின் மதம் மாற்றம் தொடர்பான பதிவுகளை நீக்குவதின் மூலம் அவருக்கு உதவி செய்யும் என கூய் நம்பிக்கை தெரிவித்தார். அதன் வழி அந்த விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வரும்.
அந்த நிருபர்கள் சந்திப்பில் பங்காரம்மாவும் உடன் இருந்தார்.
1983 ம் ஆண்டு மதம் மாற்றம் பற்றித் தம்மிடம் தமது தந்தையார் ஒரு போதும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.
“எனது தந்தை என்னைப் போன்று இந்து பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருகிறார்”, என்று தெரிவித்த அவர், நெற்றியில் விபூதிய அணிந்திருக்கும் தமது தந்தையாரின் படத்தையும் நிருபர்களுக்குக் காட்டினார்.
சமூக நல அதிகாரிகள் கேட்டுக் கொண்ட பின்னர் தம்மையும் தமது மூன்று உடன் பிறப்புக்களையும் சமூக நல இல்லத்தில் விட்டுச் சென்றதாக பங்காரம்மா சொன்னார்.
“சமூக நல இல்லத்தில் தாமும் தமது உடன் பிறப்புக்களும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறிய போது அவர் அதிர்ச்சி அடைந்தார்”, என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் நால்வரும் பின்னர் பிரிக்கப்பட்டதாகவும் அவர்கள் அதற்கு பின்னர் சந்திக்கவே இல்லை என்றும் பங்காரம்மா தெரிவித்தார்.
1990ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில்தான் அந்த பெண், சமூக நலன் சேவை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். கெடா, சுங்கை பட்டாணியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த போது, பாதுகாப்புக்காக அவர் அந்த இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாரென மெமெ மலேசியாகினியிடம் நேற்று தெரிவித்திருந்தார்.
அது குறித்து கேள்வி எழுப்பிய பங்காரம்மா, 1989 ம் ஆண்டு தாம் மதம் மாற்றம் செய்யப்பட்டதாக மதம் மாற்ற சான்றிதழ் கூறுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
“அது பொய். அந்தத் துறை அதனை மறைக்கப் பார்க்கிறது”, என்று இரு குழந்தைகளுக்குத் தாயான அவர் சொன்னார்.
2000ஆம் ஆண்டு தனது திருமணத்தை பதிவு செய்ய முற்பட்ட போது தான் தமது முஸ்லீம் தகுதி குறித்து தெரிய வந்ததாக சித்தி ஹஸ்னா வங்காரம்மா அப்துல்லா என்ற முஸ்லிம் பெயரைக் கொண்ட பங்காரம்மா கூறினார்.
அவருடைய அடையாள கார்டில் முஸ்லிம் பெயர் இருப்பதால் எஸ் சொக்கலிங்கத்துடனான தமது திருமணத்தைப் அவரால் பதிவு செய்ய இயலவில்லை. அந்தத் திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது.
தமது இரண்டு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் தமது கணவரை, தந்தை என்றும் பதிவு செய்ய முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.
இந்துக்களான தோட்டத் தொழிலாளர் பி சுப்ரமணியத்திற்கும் லட்சுமி ராமடுவுக்கும் 1982 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதி பாகாங் கெராத்தோங்கில் அவர் பிறந்ததாக பிறப்புச் சான்றிதழ் காட்டுகிறது.
