லிங்கம் ஒளிநாடா மீதான அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். வி.கே.லிங்கம் ஒளிநாடா மீதான அரச ஆணையத்தின் தலைவர் ஹய்டர் முகம்மட் நூர் இவ்வாறு கருதுகிறார்.
இன்று காலை நான்கு தொகுதிகளாக அமைந்த அந்த அறிக்கையை இஸ்தானா நெகாராவில் யாங் டி பெர்துவான் ஆகோங்கிடம் வழங்கிய பின்னர் ஹய்டர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து. ஆனால் அது பற்றி என்னால் முடிவு செய்ய இயலாது. பிரதமர்தான் அதை முடிவு செய்ய வேண்டும்”, என்றாரவர்.
அந்த அறிக்கையின் உள்ளடக்கம் பற்றி விவரிக்க ஹய்டர் மறுத்தார்.
ஆணையத்தின் செயலாளர் அப்துல்லா சனி அப்துல் அமிட் அந்த அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிப்பார் என்றும் அவர் அதனை அமைச்சரவைக்கு கொண்டு செல்வார் என்றும் மலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதியான ஹய்டர் கூறினார்.
அந்த ஆணையத்தில் இடம்பெற்றுள்ள மற்றவர்கள், முன்னாள் சாபா சரவாக் தலைமை நீதிபதி ஸ்டீவ் ஷிம் லிப் கியோங், முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மகாதேவ் சங்கர், முன்னாள் அரசாங்க தலைமை வழக்குரைஞர் சைதுன் சாவியா பூத்தே, வரலாற்று பேராசிரியர் முனைவர் கூ கே கிம் ஆகியோராவர்.
