அரச விருதளிப்புகளின்போது பாரிசான் நேசனலைப் பின்பற்றப் போவதில்லை என பினாங்கு பக்காத்தான் ரக்யாட் அரசு கூறியுள்ளது.
முன்னைய பாரிசான் அரசு செய்ததுபோல் கட்சி உறுப்பினர்களுக்கு விருதுகளையும் பட்டங்களையும் அள்ளிக் கொடுப்பதில்லை என்று மாநில அரசு பங்காளிக் கட்சிகளான ஜசெகவும் கெஅடிலானும் முடிவு செய்துள்ளன.
பட்டங்களையும் விருதுகளையும் எதிர்பார்ப்பதற்கு முன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஜசெக, கெஅடிலான் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் கூறப்பட்டுள்ளது.
புதிய அரசு பினாங்கு தீவை நிர்வகித்து மேம்படுத்தி அதை அதன் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பக்கத்தான் தலைவர்கள் கூறினர்.
எனவே கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் டத்தோஸ்ரீ, டத்தோ போன்ற பட்டங்களையும் பிஜேஎம், பிஜேகே, பிகேடி போன்ற விருதுகளையும் பெறுவதற்குத் தங்களைத் தகுதியுடைவர்களாக்கிக் கொள்ள பக்காத்தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உழைக்க வேண்டும்.
கட்சி உறுப்பினர்களுக்கு பட்டங்களையும் விருதுகளையும் அளித்து சிறப்பிப்பதைக் காட்டிலும் பினாங்கு மக்களுக்கு சேவை செய்வதற்கு கட்சி உண்மையில் ஆர்வம் கொண்டிருப்பதைக் காட்டுவதற்காகவே ஜசெக இப்படி ஒரு முடிவைச் செய்ததாக முதலமைச்சரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் கூறினார்.
மாநில அரசில் ஜசெகவின் பங்காளிக் கட்சியான கெஅடிலானும், ஒரு சிறு மாறுதலுடன் இதே போன்ற கொளகையை அறிவித்துள்ளது.
ஜசெக, தனது உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்க ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை. ஆனால் கெஅடிலான், பக்காத்தான் மாநில அரசில் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் சேவை செய்த பின்னரே தன் தலைவர்களுக்கும் உறுப்பினருக்கும் விருதுகள் அளிப்பதென முடிவு செய்துள்ளது.
பினாங்கு மக்களுக்கு சேவை செய்ததை நிருபிக்க வேண்டும். அதன் பின்னரே கெஅடிலான் தன் தலைவர்களுக்கும் உறுப்பினருக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கும் என பினாங்கு கெஅடிலான் தொடர்புக்குழுத் தலைவரும் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜக்ரின் முகமட் ஹசிம் கூறினார்.

ஏற்றுக்கொள்ளுகிறோம்.
அரசியல்வாதிகளுக்குக் கொடுக்க வேண்டாம். ஆனால் ‘ரொம்ப’ வும் ஏமாந்து போவார்கள், பாவம்!
அரசியல் சார்பற்றவர்களுக்குக் கொடுக்கலாம். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செயல்படும் அவர்களுக்கும் ஓர் அங்கீகாரம் வேண்டும் தானே!